Thursday, July 27, 2006

நன்றிகளும் வாழ்த்துக்களும்

நன்றிகளும் வாழ்த்துக்களும்

வாக்களித்த பெருமக்களுக்கு நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

அதிக வோட்டுக்களை வாங்கிக் குமித்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

நான் மூன்று பதிவுகளை போட்டிக்கு சமர்ப்பித்திருந்தாலும் எனக்கு அதில் பிடித்த ஒன்றை கீழே கொடுத்திருக்கிறேன்.(நானெல்லாம் இப்படி மீள்பதிவு போட்டாத்தான் உண்டு).

மரணம் பற்றி சிந்திக்கும் சமயமெல்லாம்

மரணம் நிரந்தரப் பிரிவென்று வருந்துபவரே
நிரந்தரமில்லா உலகை பிரிவதெப்படி நிரந்தரமாகும்?

என்று கேட்கத் தோன்றுகிறது

மரணம் என்பது
சோகமா? நம்மவர்களைப் பிரிப்பதால் வருத்தமா? இல்லை புரியாததைப் பற்றிய பயமா?

இல்லை அப்பா மரணம்

ஆராய்ந்து உணர்ந்தறிய முடியாத ஞானம்
ஞானமனைத்தும் விளக்க இயலாத கேள்வி
அறிவியலுக்கும் ஆன்மீகத்துக்கும் விளங்காத புதிர்
பயத்தால் உயிர் வழிநடத்தும் கர்மா

கர்மாவென்று சொல்வது சரியா?

உயிர்கள் இயங்குவது கூட்டை காக்கத்தானே
உயிரைப் பேணத்தானே உலகின் தொழிலெல்லாம்
மரணம்தானே அதிகபட்ச தண்டனை இவ்வுலகில்
ஆக இயக்கமனைத்திற்கும் அடிப்படை மரணமே!!!

ஒப்புக் கொள்ள முடியவில்லையே. ம்ம் ஹா மாட்டிக் கொண்டீர்.. தோற்றுவித்தலுக்கு மரணம் எப்படி காரணியாக்குவீர்?

கேளப்பா

தன்னெச்சம் இவ்வுலகில் மிச்சம் வைக்கவே
தோற்றுவிக்கிறான் இதிலடக்கம் கலையும் குழந்தையும்
அவரவரெச்சமே மிச்சமிருப்பின் தோற்றுவித்தல் எதற்காக
உயிருக்கு மரணமில்லையெனில் பிறப்பு எதற்காக

தோற்றுவிக்கிறது, வழி நடத்துகிறது மரணம் கடவுளா?

மரணமே முதல் பயம் மண்ணுயிர்கெல்லாம்
இறையை உணர்ந்தது அப்பயத்தை ஆராய்ந்துதான்
இறை நானேயென்றிருப்பானே மரணம் நீக்கினால்
இறையைத் தேடியிருப்பானா மரணத்தை மனிதனறிந்தால்?

0 comments: