Monday, May 29, 2006

சுப்ரீம் கோர்ட் கோரிக்கையும் என்னுடைய கருத்துக்களும்

சுப்ரீம் கோர்ட் இட ஒதுக்கீட்டை எதிர்த்து போராடி வரும் மாணவர்களுக்கு போராட்டத்தை கைவிட சொல்லி கோரிக்கை வைத்துள்ளது. மேலும் அரசு எடுத்த முடிவை பரிசீலனை செய்ய வழியுறுத்தியுள்ளது.

இட ஒதுக்கீடு பற்றி பலர் பல கருத்துக்களை சொல்லிவிட்டதால் நான் மேலும் அதனைப் பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை.

எனக்குள் இருக்கும் கேள்விகள் இந்த போராட்டம் நடத்தும் மாணவர்களைப் பற்றியதுதான்.

அவர்கள் போராட்டம் நடத்த தகுதியானவர்கள்தானா?

பெற்றோரிடம் பாக்கெட் மணி வாங்கிக் கொண்டு, டிஸ்கோதே, பார் என்றும் கேர்ள் பிரண்ட்ஸ், கேசுவல் செக்ஸ் என்று சுத்தி கொண்டிருப்பவர்களுக்கு கிராமப் புறங்களில் இருக்கும் மக்களைப் பற்றியும், இன்றும் பலவாறு பின்தங்கி இருக்கும் மக்களின் நிலை நிஜமாகவே தெரியுமா?

இவர்கள் பிரச்சனையின் முழு பரிமாணத்தையும் பற்றி முழுவதும் புரிந்து கொள்ளாமலேயே போராட்டம் என்று ஆரம்பித்துவிட்டார்கள் என்று நான் நினைக்கிறேன்.

நான் அவர்கள் செய்வது சரி தவறு என்று கூறவில்லை, பிரச்சனையை முழுவதுமாக புரிந்து கொள்ளாமலேயே போராட்டம் நடத்துகிறார்களோ என்று சுப்ரீம் கோர்ட் போலவே வியக்கிறேன்.

Thursday, May 18, 2006

டாவின்சி கோட் தற்காலிக தடை நீக்கம்

தடை என்று செய்தி வெளியிட்டவுடன் அந்தப் பதிவில் பின்னூட்டம் வழியாக ஒரு மதக் கலவரமே நடந்து விட்டது. இப்பொழுது தடை நீங்கி விட்டது.

என்னைக் கேட்டால் பயர் படப் பிரச்சனை விட இந்தப் பிரச்சனை மிக கம்மியான அளவிளேயே வெளிப்பட்டது.

80% ஹிந்துக்கள் பயர் பிரச்சனையை பூதாகரமாக வெடிக்கச் செய்தார்கள்.

1 - 2 % கிறிஸ்துவர்களும் அவர்களால் முடிந்த அளவு பிரச்சனை செய்து விட்டார்கள்.

பொழுதுபோக்கிற்கு இவ்வளவு பிரச்சனை.

மொத்தத்தில் இந்தியா மதச் சார்பற்ற நாடு அல்ல. நிறைய மதங்களின் சார்பு கொண்ட நாடு என்றுதான் தெரிகிறது.

மொத்தத்தில் இந்தியாவை ராமரும், கிறிஸ்துவும், முகமது நபிகளும் காக்க முடியாது.

Tuesday, May 16, 2006

டாவின்சி கோட் படம் இந்தியாவில் தற்காலிக தடை

டாவின்சி கோட் படம் இந்தியாவில் தற்காலிக தடை செய்யப்பட்டது.

இன்னோவேடிவில் முன் பதிவு செய்தது வீணாகி விட்டது.

இங்கிலாந்திலும், அமெரிக்கா, பிரான்ஸில் தடை செய்யப் படாத படம் இந்தியாவில் மட்டும் தடை ஏன்?

டாவின்சி கோட் பொய் பறை சாற்றுகிறது என்று சொல்பவர்கள் பைபிள் மட்டும் எப்படி உண்மை சொல்கிறது என்று சொல்ல முடியும்.

பைபிளை கிறிஸ்து அவர்கள் எழுதவில்லையே அவர் கடவுள் என்று நினைத்த மனிதர்கள் எழுதியதுதானே?

விமர்சனங்களை தாங்க முடியாதவர்கள் ஏன் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டச் சொல்ல வேண்டும்?

திரும்ப சென்று முன் பதிவை ரத்து செய்ய வேண்டும்

Tuesday, May 02, 2006

ரசித்த படம் ஹேராம்

கமல் தன்னுடைய கனவுப் படம் என்று மருத நாயகம் பற்றி கூறிக் கொண்டிருக்கிறார். அந்தப் படம் வெளியாகுமோ அல்லது வெளியாகாதோ தெரியாது ஆனால் கமல் என்ற கலைஞன் ஹேராம் என்ற படம் எடுத்ததின் மூலம் தமிழக திரையுலகில் சாகாவரம் பெற்று விட்டான் என்று என்னால் உறுதியாக கூற முடியும்.

புதிய பறவை என்று சிவாஜி நடித்த திரைப்படம் பற்றி கூறும் சமயம் "இது போன்ற படங்களை ஏற்றுக் கொள்ளும் மனோபாவங்கள் மக்களிடம் இல்லாத சமயத்தில் வெளிவந்து விட்ட திரைப்படம்" என்று கூறுவார்கள்.

ஹேராம் படத்தில் இருந்த முத்தக் காட்சிகளும் அது போல அமைந்தது வருத்ததிற்குரியது. தமிழன் அது போன்ற காட்சிகளை ஜீரணம் செய்து கொள்ள முடியாததாலேயே இந்தப் படம் அது பெற்றிருக்க வேண்டிய வெற்றியைப் பெறவில்லை என்பது என் கருத்து.

ஆங்கிலத்தில் கூறுவார்கள் " நிஜ உலகில் கதா நாயர்கள் பிரம்மிக்கத்தக்க காரியங்களை தொடர்ந்து செய்வதில்லை" அதாவது நிஜ உலகில் சூப்பர் மேன் கதா நாயகனாக இருப்பதில்லை. " நிஜ வாழ்வில் ஒரு சாதாரண மனிதன் ஒரு சாதாரணமான சமயத்தில் பிரம்மிக்கத்தக்க காரியம் செய்யும் சமயம் கதா நாயகனாகிறான்".

அதாவது நிஜ வாழ்வில் கதா நாயகன் உதாரண புருஷர்களாக இருக்க மாட்டார்கள். அவர்களும் சாதாரண மனிதர்கள்தாம்.

காந்திஜீயும் ஒரு சாதாரண மனிதரே, அவரிடம் ஒரு சாதாரண மனிதரிடம் உள்ள குறைகள் அனைத்துமே இருந்தது, ஆனால் அந்தக் குறைகளையும் தாண்டி அவர் நிஜ வாழ்வில் ஒரு கதா நாயகர் அதற்கு மேலும் ஒரு வார்த்தை உண்டெனில் அதற்கும் உரித்தானவர்.

இந்தக் கதையின் நாயகன் சாகேத் ராமும் தன்னுடைய காதல் மனைவி கற்பழித்து கொடூரமாக கொலை செய்யப் பட்டவுடன் துப்பாக்கி தூக்கிக் கொண்டு கண்டவரை எல்லாம் சூடும் ஒரு சராசரி மனிதன்தான். அவன் மேலும் எவ்வளவு சராசரி என்பதை கதை மேலும் நமக்கு காட்டுகிறது. தன் மனைவி காதலித்தாலும், ஒரு அழகான அப்பாவி பெண் கண்டு திருமணம் செய்யதாகட்டும், தன் மனைவியின் மரணத்திற்கு காந்திதான் காரணம் என்று கூறுவதை நம்புவதாகட்டும் சாகேத் ராம் ஒரு சராசரி மனிதன்தான் என்பதை திரும்ப திரும்ப நாம் உணர்கிறோம்.

ஆனால் திரைப்படம் ஒரு சாரசரி மனிதனின் பயணம் பற்றி இருக்க முடியாதே அதனால் எப்படி சாகேத் ராம் கதா நாயகன் ஆகிறான்? சூழ் நிலைகள் அவன் தன்னுடைய நிலை விட்டு விலகி அன்றிருந்த சூழ் நிலைகளின் சாட்சியாக்கி விடுகிறது. அவனுடைய நண்பனின் மரணம், அவன் எதிரிகள் என்று நினைக்கும் மனிதர்களின் நிலையை காட்டுகிறது. அதனால் அன்றிருந்த ஒட்டு மொத்த சூழ் நிலைகளின் சாட்சியாகி இந்தக் கதையின் நாயகனாகிறான். மத சூழ் நிலையின் ஒட்டு மொத்த சாட்சியாக இருக்கும் சாகேத் ராமின் மரணமும் மதக் கலவரங்களில் இடையே நிகழ்கிறது.

ஒரு சில படத்தில் மட்டுமே அனைவரும் சிறப்பாக நடித்திருப்பார்கள். இந்தப் படம் அந்த ஒரு சில படங்களில் ஒன்று. கமலின் நடிப்பு பற்றி நான் சொல்லி தெரிய எதுமில்லை, ஷாருக்கின் பாத்திரம் சிறியதாக இருந்தாலும் நிறைவாக செய்திருக்கிறார், அப்பாவி பெண்ணாக வசுந்திரா கச்சிதம்.

ஆனால் இந்தப் படத்தில் கமலையே தூக்கிச் சாப்பிட்டிருப்பவர் அதுல் குல்கர்னி அருமையான நடிப்பு.

இசை ஞானி இளையராஜா ஒரு அற்புதம் என்பதை பிண்ணணி இசையும் பாடல்களும் பறைசாற்றும்.

காந்தி தேசப்பிரிவின் சமயம் எடுத்திருந்த நிலைப் பாட்டின் காரணமாகவே கொலை செய்யப்பட்டார் என்பதையும் அந்த நிலைப்பாடு ஏன்? அதனை ஏன் பலர் புரிந்து கொள்ளவில்லை? ஏன் அவர்கள் பார்வையில் காந்தி ஒரு வில்லனாகத் தெரிந்தார்? என்பதைப் பற்றியெல்லாம் படமெடுத்திருக்கிறான் ஒரு தமிழ் கலைஞன் என்பதில் நானும் தமிழன் என்ற முறையில் பெருமை கொள்கிறேன்.

காந்தியின் நிலைப்பாட்டைப் பற்றி என் கருத்துக்கள் அடுத்தப் பதிவில்.