Tuesday, May 02, 2006

ரசித்த படம் ஹேராம்

கமல் தன்னுடைய கனவுப் படம் என்று மருத நாயகம் பற்றி கூறிக் கொண்டிருக்கிறார். அந்தப் படம் வெளியாகுமோ அல்லது வெளியாகாதோ தெரியாது ஆனால் கமல் என்ற கலைஞன் ஹேராம் என்ற படம் எடுத்ததின் மூலம் தமிழக திரையுலகில் சாகாவரம் பெற்று விட்டான் என்று என்னால் உறுதியாக கூற முடியும்.

புதிய பறவை என்று சிவாஜி நடித்த திரைப்படம் பற்றி கூறும் சமயம் "இது போன்ற படங்களை ஏற்றுக் கொள்ளும் மனோபாவங்கள் மக்களிடம் இல்லாத சமயத்தில் வெளிவந்து விட்ட திரைப்படம்" என்று கூறுவார்கள்.

ஹேராம் படத்தில் இருந்த முத்தக் காட்சிகளும் அது போல அமைந்தது வருத்ததிற்குரியது. தமிழன் அது போன்ற காட்சிகளை ஜீரணம் செய்து கொள்ள முடியாததாலேயே இந்தப் படம் அது பெற்றிருக்க வேண்டிய வெற்றியைப் பெறவில்லை என்பது என் கருத்து.

ஆங்கிலத்தில் கூறுவார்கள் " நிஜ உலகில் கதா நாயர்கள் பிரம்மிக்கத்தக்க காரியங்களை தொடர்ந்து செய்வதில்லை" அதாவது நிஜ உலகில் சூப்பர் மேன் கதா நாயகனாக இருப்பதில்லை. " நிஜ வாழ்வில் ஒரு சாதாரண மனிதன் ஒரு சாதாரணமான சமயத்தில் பிரம்மிக்கத்தக்க காரியம் செய்யும் சமயம் கதா நாயகனாகிறான்".

அதாவது நிஜ வாழ்வில் கதா நாயகன் உதாரண புருஷர்களாக இருக்க மாட்டார்கள். அவர்களும் சாதாரண மனிதர்கள்தாம்.

காந்திஜீயும் ஒரு சாதாரண மனிதரே, அவரிடம் ஒரு சாதாரண மனிதரிடம் உள்ள குறைகள் அனைத்துமே இருந்தது, ஆனால் அந்தக் குறைகளையும் தாண்டி அவர் நிஜ வாழ்வில் ஒரு கதா நாயகர் அதற்கு மேலும் ஒரு வார்த்தை உண்டெனில் அதற்கும் உரித்தானவர்.

இந்தக் கதையின் நாயகன் சாகேத் ராமும் தன்னுடைய காதல் மனைவி கற்பழித்து கொடூரமாக கொலை செய்யப் பட்டவுடன் துப்பாக்கி தூக்கிக் கொண்டு கண்டவரை எல்லாம் சூடும் ஒரு சராசரி மனிதன்தான். அவன் மேலும் எவ்வளவு சராசரி என்பதை கதை மேலும் நமக்கு காட்டுகிறது. தன் மனைவி காதலித்தாலும், ஒரு அழகான அப்பாவி பெண் கண்டு திருமணம் செய்யதாகட்டும், தன் மனைவியின் மரணத்திற்கு காந்திதான் காரணம் என்று கூறுவதை நம்புவதாகட்டும் சாகேத் ராம் ஒரு சராசரி மனிதன்தான் என்பதை திரும்ப திரும்ப நாம் உணர்கிறோம்.

ஆனால் திரைப்படம் ஒரு சாரசரி மனிதனின் பயணம் பற்றி இருக்க முடியாதே அதனால் எப்படி சாகேத் ராம் கதா நாயகன் ஆகிறான்? சூழ் நிலைகள் அவன் தன்னுடைய நிலை விட்டு விலகி அன்றிருந்த சூழ் நிலைகளின் சாட்சியாக்கி விடுகிறது. அவனுடைய நண்பனின் மரணம், அவன் எதிரிகள் என்று நினைக்கும் மனிதர்களின் நிலையை காட்டுகிறது. அதனால் அன்றிருந்த ஒட்டு மொத்த சூழ் நிலைகளின் சாட்சியாகி இந்தக் கதையின் நாயகனாகிறான். மத சூழ் நிலையின் ஒட்டு மொத்த சாட்சியாக இருக்கும் சாகேத் ராமின் மரணமும் மதக் கலவரங்களில் இடையே நிகழ்கிறது.

ஒரு சில படத்தில் மட்டுமே அனைவரும் சிறப்பாக நடித்திருப்பார்கள். இந்தப் படம் அந்த ஒரு சில படங்களில் ஒன்று. கமலின் நடிப்பு பற்றி நான் சொல்லி தெரிய எதுமில்லை, ஷாருக்கின் பாத்திரம் சிறியதாக இருந்தாலும் நிறைவாக செய்திருக்கிறார், அப்பாவி பெண்ணாக வசுந்திரா கச்சிதம்.

ஆனால் இந்தப் படத்தில் கமலையே தூக்கிச் சாப்பிட்டிருப்பவர் அதுல் குல்கர்னி அருமையான நடிப்பு.

இசை ஞானி இளையராஜா ஒரு அற்புதம் என்பதை பிண்ணணி இசையும் பாடல்களும் பறைசாற்றும்.

காந்தி தேசப்பிரிவின் சமயம் எடுத்திருந்த நிலைப் பாட்டின் காரணமாகவே கொலை செய்யப்பட்டார் என்பதையும் அந்த நிலைப்பாடு ஏன்? அதனை ஏன் பலர் புரிந்து கொள்ளவில்லை? ஏன் அவர்கள் பார்வையில் காந்தி ஒரு வில்லனாகத் தெரிந்தார்? என்பதைப் பற்றியெல்லாம் படமெடுத்திருக்கிறான் ஒரு தமிழ் கலைஞன் என்பதில் நானும் தமிழன் என்ற முறையில் பெருமை கொள்கிறேன்.

காந்தியின் நிலைப்பாட்டைப் பற்றி என் கருத்துக்கள் அடுத்தப் பதிவில்.

8 comments:

said...

படத்துல ராஜா கூட வேட்டைக்கு சாகேத் ராம் போகும் போது அவனது வட நாட்டு நண்பன் ரயில்வே கேட்டில் சில்லறை வியாபாரம் செய்து கொண்டிருப்பார். அப்போ என்ன ஆச்சுன்னு சாகேத் ராம் விசாரிக்கையில்,
"நீ தமிழன், அங்க நடந்த கலவரத்த உன்னால உணர முடியாது"னு அவர் சொல்லுவார்.
அதே தான் நடந்தது இங்கயும். ஷாரூக், கமலயும் ஷாரூகையும் காட்டிக் கொடுக்கும் பிம்ப், என் சகலரும் அசத்தி இருப்பார்கள்.

said...

நீங்கள் ஒளிப்பதிவைப் பற்றிச் சொல்லாமல் விட்டீர்களே?
கமலை வெவ்வேறு நிறங்களில் காட்டி அசரடித்திருப்பார்கள். எவ்வளவு தத்ரூபமாக வந்திருக்கும். அதுவும் கமல் துப்பாக்கி சுட்டுப் பயிற்சிசெய்யும் காட்சி.

கமல் தன் காதலியுடன் கொள்ளும் உறவுக்காட்சியும், பின் மனைவியோடு கொள்ளும் உறவுக்காட்சியும்கூட மிகச்சிறப்பான வெளிப்பாடுகளே. அவை வலிந்து திணக்கப்பட்டவையென்று சொல்ல முடியாது.

முன்னயதில் மிருதுவான, நளினமான அணுகுமுறை. பின்னயதில் (காந்தியைக் கொல்லவதற்காக உருவேற்றப்பட்டடிருந்த நிலையில்) வன்முறை சார்ந்த கடின அணுகுமுறை.
இப்படிப் படமெடுப்பது ஒன்றும் இலகுவான காரியமல்ல. முழுக்க முழுக்க அந்தக்காலத்தைக் கண்முன் கொண்டு வரவேண்டும். நவீனத்தின் எந்தப்பாதிப்பும் இருக்கக்கூடாது. வாகனங்கள், கட்டடங்கள், பாதைகள், மோட்டார் சைக்கிள், லிப்ட் என்று எல்லாமே. இப்படியான துணிகர முயற்சிகள் தமிழ்ச்சினிமாவில் வேறெப்போதும் நடந்த ஞாபகமில்லை.

இதுபோன்ற படங்கள் வெற்றிபெறும் சூழல் இப்போது இல்லை. இனியும் வரப்போவதில்லை. (இந்தியில் எப்படி?)

நிச்சயமாகப் பெருமைகொள்ள வேண்டிய படம்தான் ஹேராம். பன்னாட்டு அளிவில் நாங்கள் பெருமைப்பட உதவும்.

ஆனாலும் தமிழகத்தில் அவ்வாண்டுக்கான சிறந்த திரைப்பட விருது படையப்பாவுக்குப் போய்ச் சேர்ந்தது. அதேயாண்டு வந்த சேதுவுக்குக் கூட வரவில்லை. பாலாவும் அதைத்தான் சொல்லியிருந்தார். ஹேராமுக்கே கிடைக்காத விருது சேதுவுக்கு எதற்கு என்று.

said...

நன்றி பிரசன்னா, வசந்தன். வசந்தன் நான் சொல்ல மறந்த தகவல்களை சொன்னமைக்கு நன்றி.

said...

//ஹேராம் படத்தில் இருந்த முத்தக் காட்சிகளும் அது போல அமைந்தது வருத்ததிற்குரியது. தமிழன் அது போன்ற காட்சிகளை ஜீரணம் செய்து கொள்ள முடியாததாலேயே இந்தப் படம் அது பெற்றிருக்க வேண்டிய வெற்றியைப் பெறவில்லை என்பது என் கருத்து.//

ஒரு முத்ததுக்கெல்லாம் படம் ஓடவில்லையென்றால் கமலின் பாதி படம் நேரே தியேட்டரை விட்டு பொட்டிக்குள் பதுங்கி இருக்கும்.

மெதுவாக நகரும் கதைதான் முக்கிய காரணம் என்று நான் நினைக்கிறேன்.

said...

வசனங்களும் மிக கூர்மை. (கமல்?)
வேட்டைக்கு போகலாம் என சொல்லும் ஒரு காட்சியில் காந்தியவாதியான வசுந்தரா,

'உங்க பிள்ளைகளை ஓநாய் தூக்கிட்டு போன அது சரியா?' என்பார்.

கொஞ்சம் மவுனம் காத்த அதுல், 'ஓநாயாய் இருந்து பார்த்தால் தான் அந்த ஞாயம் புரியும்' என்பார்.

பல விஷயங்களை சொல்லிடும் அந்த வசனம்.

படத்தில பல் மொழி கலந்ததிருந்த போதிலும் சப் டைடில் போடவில்லை அது கூட காரணமாயிருக்கலாம்

உண்மையில் உலக தரத்தில் உள்ள தமிழ்படம்

said...

"//நீ தமிழன், அங்க நடந்த கலவரத்த உன்னால உணர முடியாது"னு அவர் சொல்லுவார்//."

தம்பி பிரசன்னாவின் கருத்து மிகச்சரி.அந்த கலவரத்தை உணராத காரணத்தால் தான் தமிழ்நாட்டில்
படமும் ஓடவில்லை.பரிசும் கிடைக்கவில்லை.கமல் வெவ்வேறு
தோற்றங்களில்,சிறந்த நடிப்பில் கலக்கியிருப்பார்.

அன்புடன்,
துபாய் ராஜா.

said...

நன்றி நந்தன் நன்றி துபாய் ராஜா.

நன்றி உதயக்குமார். மற்ற படங்களில் இலை மறைவு காய் மறைவாகத்தான் காட்டப்பட்டது. இந்தப் படத்தில் வெளிப்படையாக காட்டப்பட்டது. அதனால்தான் குறிப்பிட்டேன். வரலாற்றுப் படங்களில் சிறிது மெதுவாகத்தான் கதை செல்லும் அது அவ்வளவு பிரச்சனையில்லை என்பது என் கருத்து.

said...

ஹேராம்நிறையக் காட்சிப்படிமங்களையும் கொண்டிருந்து. சினிமா ஒரு காட்சியுடகம் என்பதை, தமிழில் சரிவரச் செய்த படம் ஹேராம்.
லோக்கார்ணோ திரைப்படவிழாவில் மிகுந்த வரவேற்புப் பெற்றபடம்.இது நேரடி ஒலிப்பதிவில் உருவான படம் என நினைக்கின்றேன்.