Wednesday, January 17, 2007

Crash படம், ஷில்பா ஷெட்டி, கிப்ஸ்

Crash 2005ல் சிறந்த படத்திற்கான ஆஸ்காரையும், சிறந்த திரைக் கதைக்கான ஆஸ்காரையும் வென்ற படம். ஒரு சாதாரண குடும்பத் தலைவி, ஒரு இரானிய கடை நடத்துபவர், இரு காவல்துறை அதிகாரிகள், ஒரு கறுப்பின தம்பதி, ஒரு மெக்ஸிகன் பூட்டு ரிப்பேர் செய்பவர், இரு கார் திருடர்கள், ஒரு கொரியன் தம்பதி, புதிதாக வேலைக்கு சேர்ந்த போலீஸ்காரர்.

இவர்கள் எல்லோருக்கும் தனித் தனியான வாழ்க்கைகள். இவர்கள் அனைவருக்கும் இடையில் பொதுவாக இவர்களை சேர்த்து வைக்கிறது இரண்டு விஷயங்கள்.

1. ஒரு கார் ஆக்ஸிடெண்ட்.

2. கலாச்சாரம், நிறம், இனம், நாடு தங்களுக்கு தாங்களே இவர்கள் ஏற்படுத்திக் கொண்ட பிரிவினைகள் தான்.

சமூகத்தில் ஒரு இனத்தினர் மற்றோர் இனத்தினரால் தாழ்த்தப் படுகிறார்கள். அப்படி தாழ்த்தப் பட்டவர்கள் தாழ்த்தப்படுவதினால் ஏற்படும் கஷ்டங்களை உணர்வதில்லை. அவர்களுக்கு மற்றவரை தாழ்மைபடுத்தி பேசக் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் தங்கள் கஷ்டங்களை நினைப்பதில்லை மற்றவரைப் பற்றி கவலை கொளவதில்லை.

இந்தக் கதையில் இருக்கும் ஈரானிய கடைக்காராரிடத்தில் இது தான் நடக்கிறது. அமெரிக்கர்களின் இனக் கொடுமைக்கு உள்ளாகும் இவர், அந்த சமூகத்தில் தாழ்ந்திருக்கும் மெக்ஸிக்கன் பூட்டு ரிப்பேர்காரரிடம் மோசமாக நடப்பதில் இருந்து மாறுவதில்லை. பூட்டு ரிப்பேர் செய்து கொடுத்த பின்னரும் அந்த மெக்ஸிகன் பூட்டு ரிப்பேர்காரரிடம் கேவலமான முறையில் பேசி மனதளவில் துன்புறுத்தி காசு கூட வாங்காமல் செல்லும் அளவுக்கு முறைகேடாக நடந்து கொள்ளத் தவறுவதில்லை.

தன் கடை கொள்ளை போனதும் மெக்ஸிகன் தான் குற்றவாளியாக இருக்க வேண்டும் என்பதை தனக்குள்ளேயே தீர்மானித்து, மெக்ஸிகனிய பூட்டு ரிப்பேர்காரரை கொலை செய்ய துப்பாக்கியுடன் சென்று சுடும் போது தவறுதலாக அந்த பூட்டு ரிப்பேர்காரரின் 10 வயது மகளைச் சுடும் அளவுக்கு, இன வெறி கொடுமைகளுக்கு நாள்தோறும் உள்ளாகும் அந்த ஈரான்காரரிடம் இன வெறி இருக்கத் தான் செய்கிறது.

விபத்தில் சிக்கி கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் கறுப்பின பெண் ஒருத்தியைக் காப்பாற்ற வருகிறார் போலீஸ்காரர் ஒருத்தர். அந்தப் போலீஸ்காரை இதே கறுப்பினப் பெண் தன் கணவருடன் காரில் சென்று கொண்டிருந்த சமயம் நிறுத்தி, கறுப்பினத்தின் மேல் கொண்டிருக்கும் வெறுப்பால் விசாரணை என்ற பெயரில் தன் கைகளை அந்தப் பெண்ணின் அங்கம் முழுக்க தடவி முறைகேடாக நடந்து கொண்டவர்.

அதே போலீஸ்காரரைப் பார்த்த பெண் உயிர்ப் பற்றிக் கூட கவலைப்படாமல் no no என்று கைகளை உதவிக்கு நீட்டாமல் இடிபாடுகளில் மேலும் சென்று சிக்கிக் கொள்வதைப் பார்த்து உடைந்து போகும் போலீஸ்காரரின் பிண்ணணி நமக்கு தெரியும் சமயம் அவருக்கு கறுப்பினத்தால் நேர்ந்த கொடுமைகள் நமக்கு தெரிய வருகிறது.

இனம், பணம், மதம், நிறம், நாடு என்று எத்தனை விதங்களில் மனிதர்கள் பிரிவினை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த முட்டாள்தனமான உணர்வுகள் எந்த அளவு புரையோடிக் கிடக்கிறது, எல்லோரிடத்திலும் எப்படி புரையோடிக் கிடக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காண்பிக்கும் படம் இது.

இந்தக் பிரிவினைகளால் எல்லோரும் பாதிக்கப் படுகிறார்கள். அதே சமயம் எல்லோரும் இந்தக் கொடுமைகளை அவர்கள் அளவில் இழைக்கிறார்கள்.

இதில் ஒவ்வொருவர் பார்வையிலும் அவர்கள் செய்வது தவறாக அவர்கள் அறிவதே இல்லை.

விசாரணை என்ற பெயரில் பெண்ணிடம் முறைகேடாக நடந்து கொள்ளும் போலீஸ்காரரின் பிண்ணணியிலும் கூட கண்ணீர் வரவழைக்கும் கதை இருக்கிறது.

இது போன்ற கொடுமைகள்(discrimination) நம்மை ஒரு முறையாவது பாதித்திருக்கும். இது போன்ற கொடுமைகளை நாம் ஒரு முறைக்கு மேலேயே செய்திருப்போம் என்பதைக் காண்பிக்கிறது படம்.

**********************************************************************************

ஷில்பா ஷெட்டி இங்கிலாந்தில் நடக்கும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இன வெறிக் கொடுமைகளை சந்தித்து வருகிறார்.

Big Brother என்ற பெயரில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் தொலைக்காட்சி, படத்துறையைச் சார்ந்த பல நட்சத்திரங்களை ஒரே வீட்டில் எந்த விதமான வசதிகளும் இல்லாமல்(தொலைபேசி, தொலைக்காட்சி, பேப்பர் என்று எந்த விதமான வசதிகளும் இல்லாமல்) தங்க வைத்து அவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை எல்லாம் பார்க்கும் நிகழ்ச்சி.

முதல் முறையாக ஆசியக் கண்டத்தில் இருந்து ஷில்பா ஷெட்டியை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

அந்த நிகழ்ச்சி தொலைக் காட்சியில் ஒளிபரப்பப் பட்ட போது ஷில்பா ஷெட்டிக்கு நடந்த இன வெறிக் கொடுமைகள் இந்த நிகழ்ச்சி பார்ப்பவரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

அவரை இந்தியர் என்பதால் தகாத வார்த்தைகளால் கூப்பிடுவது, பெயர் சொல்லாமல் ஏ இந்தியன் இங்கே வா என்று அவரை விளிப்பது போன்ற நிகழ்வுகள் தொலைக்காட்சி பார்ப்பவர் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

இதனை விட அதிர்ச்சியூட்டிய விஷயம் இந்த நிகழ்ச்சியைப் பார்த்த இங்கிலாந்து இந்தியர்கள் இது சர்வ சாதாரணமாக நடப்பது என்றும் நாள் தோறும் அவர்கள் இதனை சந்தித்து வருகிறார்கள் என்றும் பேட்டி கொடுத்தது தான்.

******************************************************************************

Herschelle Gibbs புகழ் பெற்ற தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர். இவர் சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான நடை பெற்ற ஆட்டத்தில் வேடிக்கை பார்க்க வந்த பாகிஸ்தானியரை மோசமான வார்த்தைகளை உபயோகப் படுத்தி கமெண்ட அடித்தது, ஸ்டம்ப் மைக் மூலமாக வெளியாகி உள்ளது. இதற்காக அவருக்கு அடுத்த இரண்டு ஆட்டத்தில் விளையாட தடை விதிக்கப் பட்டுள்ளது.

இந்தியக் கிரிக்கெட் அணி பாகிஸ்தான் சென்ற சமயம் அங்கு கிடைத்த வரவேற்பு இரு நாடுகளில் நல்லெண்ணத்தை வளர்க்கும் விதமாக அமைந்தது.

இப்படிப் பட்ட ஒரு விளையாட்டில் Racist கமெண்ட்ஸ் உபயோகித்து கிரிக்கெட் ஆட்டத்தையே தலை குனியச் செய்திருக்கும் கிப்ஸுக்கு இரு ஆட்டங்களுக்கு மட்டுமே தடை.

***********************************************************************************

பூமா தேவி சிரிக்கப் போறா மனுஷங்க எல்லாரும் அழியப் போறாங்க இது நகைச்சுவையாக எதோ படத்தில் ஒலித்த வசனம். ஏனோ இன்று நினைவுக்கு வந்தது.

சுட்டிகள்

ஷில்பா ஷெட்டி பற்றி

கிப்ஸ் பற்றி

6 comments:

said...

நேற்று என் டி டிவி இல் சில்பா சண்டையிட்ட படக்காட்சியை பார்த்தீரா ??

said...

"ஏ இண்டியன்!" என்று கூப்பிடுவது இனவெறியா?

இங்கே சுற்றுலாவுக்கு வரும் வெள்ளைக்காரர்களை நாம் நடத்தும் விதம் எப்படி என்று கொஞ்சம் சிந்தித்துப் பார்க்கவும் :-)))))

சினிமாவில் கூட வெள்ளைக்காரர்களை காமெடியன்களாகத் தான் காட்டுகிறோம்.

"வெள்ளைக்கார மச்சான்" என்று பாட்டு கூட இருக்கே?

வீட்டுக்கு வீடு வாசபடிதான்....

said...

லக்கி பிரிட்டிஷ் பார்லிமெண்டில் இதைப் பற்றி விவாதித்திருக்கிறார்கள்.

கூப்பிடும் விதம் இருக்கிறதல்லவா?

இங்கே சென்று பாருங்கள்.

http://www.ndtv.com/topstories/showtopstory.asp?slug=Racism+row%3A+UK+police+to+probe+emails&id=21183&category=National

said...

பார்த்தேங்க ரவி. அதோட இங்கிலாந்து இந்தியர்கள் இது எப்பவுமே எங்களுக்கு நடக்கறதுதான் இது மூலமா வெளியே தெரிஞ்சிருக்கு அவ்வளவுதான் என்று சொன்னதையும் கேட்டேன். அதான் காலைல இருந்து ஒரே டென்ஷன் என்ன மனுஷங்க அப்படீன்னு அதுதான் உங்க பதிவில வந்து குடுத்த பின்னூட்டத்துக்கும் காரணம்.

உலகம் எங்கே போகுதுன்னே தெரியல.

said...

நம்ம நாட்டுக்குள்ளேயே ஜாதி, மதம் பேரைச் சொல்லி திட்டுற கண்ணறாவி இருக்கு இல்லையா? வெள்ளைக்காரனை நொந்து என்ன பிரயோசனம்?

எனக்கென்னவோ Big Brother நிகழ்ச்சியை ஹிட் ஆக்க இந்த ஸ்கூப் நியூசை கிளப்புகிறார்கள் என்று தோன்றுகிறது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்காக ஷில்பாவுக்கு கோடிக்கணக்கான பவுண்டு சம்பளமாமே?

said...

உண்மைதாங்க எல்லா இடத்திலேயும் தான் இருக்கு.

ரேடிங்க்ஸுக்காக கண்டிப்பா இது மாதிரி எல்லாம் செய்வாங்கங்கறது உண்மைதான்.

என்னை பாதிச்சது பிரோகரமில் ஷில்பாவுக்கு நடந்தது இல்லை. இதைப் பத்தி இங்கிலாந்து வாழ் இந்தியர்களை கருத்து கேட்ட போது அவர்கள் இதனை எடுத்துக் கொண்ட விதம் தான். ஒருத்தர் கூட ஒரு ஆச்சரியமோ இல்லை கோபமோ கொள்ளவில்லை. எல்லோரும் எல்லா இடத்திலேயும் இருக்கு அதுதான் அங்கேயும் நடக்குதுன்னு சாதாரணமா எடுத்துக் கொண்டார்கள்.

என்னடா உலகம் இது அப்படீன்னு அப்பத்தான் தோணுச்சு. சாதாரணமா எடுத்துகிற அளவுக்கு இது போன்ற விஷயங்கள் இன்னும் நம்மிடையே இருக்குதுன்னா எங்கே போயிட்டிருக்கோம் அப்படின்னு ஒரு வேதனை.

மேலே கிப்ஸ் பாகிஸ்தானியர்களைப் பார்த்து பேசினது வேற வந்தது. இது ஒண்ணும் கிரிக்கெட்டில் புதுசு இல்லை நிறைய வருஷமா நடக்கறது தான்.

பனேசாரைப் பார்த்து bloody indian அப்படீன்னு ஆஸ்திரேலியாவில் 1 மாசத்துக்கு முன்னாடிதான் கூப்பிட்டாங்க.

ஆனா இதை எல்லாம் படிக்கும் போது இதை எல்லாம் பத்தி கேட்கும் போதும் எல்லா இடத்திலையும் நடக்குறதுதானே அப்படின்னு சும்மா விட முடியல.

மனசு சங்கடத்தில் இது போன்ற பதிவுகள் தான் இட முடியுது.